புதுடெல்லி,
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடி வசூலாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வசூல், தொடர்ந்து 9 மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்து வந்தது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.56,247 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.8,646 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஆனால், கடந்த ஜூன் மாதம் கொரோனா 2-வது அலை காரணமாக ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றது. இருப்பினும், ஜூலை மாதத்தில் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. தற்போது, தொடர்ந்து 2-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்துடன் (ரூ.86 ஆயிரத்து 449 கோடி) ஒப்பிடுகையில், இது 30 சதவீதம் அதிகம். இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் (ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் கோடி) ஒப்பிடுகையில், இது குறைவாகும்.
பொருளாதார வளர்ச்சி, வரிஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கை, போலி ரசீதுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றால் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது. இனிவரும் மாதங்களிலும் அதிகமான வசூல் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.