தேசிய செய்திகள்

குஜராத்: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையே சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சட்டசபை வளாகம் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வதோதரா

குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. வழக்கம்போல் இன்று காலை 9 மணிக்கு சபை கூட இருந்தது. அதற்காக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபைக்கு வருகை தந்தனர்.

அப்போது, காலை 8.45 மணிக்கு இ-மெயில் வழியே அதிகாரி ஒருவருக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சட்டசபைக்கு சென்றனர். சட்டசபை வளாகம் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும், சட்டசபைக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த தீவிர சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனை காந்திநகர் காவல் கண்காணிப்பாளர் ரவி தேஜா வசம்செட்டி கூறினார். இதனால் ஒரு மணி நேர காலதாமதத்திற்கு பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன. எனினும், அச்சத்துடனேயே உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் பங்கேற்றனர்.