புதுடெல்லி,
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்து விற்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 செ.மி. தானியங்கி துப்பாக்கிகள், 5 நாட்டுத்துப்பாக்கிகள் உள்பட மொத்தம் 18 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அரிவாள், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க, போலி அடையாளங்கள் மற்றும் ரகசிய செயலிகளை பயன்படுத்தி இந்த கடத்தல் நெட் வொர்க்கை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.