ஐதராபாத்,
புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்களும் மாலை 4 மணிக்கு அலுவலகங்களை விட்டு வெளியேற தெலுங்கானா அரசு அனுமதி அளித்தது. இந்த உத்தரவு முஸ்லிம் சமூகத்தால் அனுசரிக்கப்படும் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை) அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசாங்கம் இதன்மூலம் மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள்/, ஒப்பந்த / அவுட்சோர்சிங் / வாரியங்கள்/ நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் ரம்ஜான் புனித மாதத்தில், மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள்/பள்ளிகளை விட்டு வெளியேற அனுமதிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்ஸ் ஊழியர்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசாங்கத்தால் முந்தைய ஆண்டுகளிலும் இதே போன்ற ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன, இது முஸ்லிம் ஊழியர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை சமரசம் செய்யாமல் தங்கள் மதக் கடமைகளைக் கடைப்பிடிக்க முடியும் என்பதை உறுதி செய்யும் நீண்டகால நடைமுறையை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு புனித ரம்ஜான் மாதம், பிப்ரவரி 18, 2026 அன்று தொடங்கி சுமார் 29 முதல் 30 நாட்கள் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகங்களை விட்டு வெளியேற அனுமதிக்கும் தெலுங்கானா அரசின் முடிவுக்கு பதிலளித்த அயோத்தி ஹனுமன்கர்கி மடத்தின் தலைமை அர்ச்சகர் தேவேஷாச்சார்யா மகாராஜ் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேலும் இது "துரதிர்ஷ்டவசமானது" என்றும் இது வாக்கு வங்கி அரசியலால் இயக்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தெலுங்கானாவில், முஸ்லிம் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களிலிருந்து மாலை 4 மணிக்கு பணியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முஸ்லிம்களிடம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வது போல் உள்ளது. முஸ்லிம் வாக்கு வங்கிக்காக, அவர்கள் எந்த அளவிற்கும் செல்லலாம்.
முக்கிய பண்டிகைகளின் போது இந்துக்களுக்கு இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுமா..? அவர்கள் இந்துக்களுக்கும் அவ்வாறு செய்வார்களா? இல்லை. நவராத்திரி அல்லது பிற பண்டிகைகளின் போது இந்துக்களுக்கும் அத்தகைய விடுப்பு வழங்குவார்களா?. தெலுங்கானா அரசு இந்து பண்டிகைகளுக்கு இதேபோன்ற பரிசீலனையை வழங்குவதில்லை. அவர்கள் இந்துக்களுக்கு விடுப்பு கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
பண்டிகை நடக்கும்போது இந்துக்களின் விடுமுறையை ரத்து செய்ய கூட முயற்சிக்கிறார்கள். முன்னதாக, தெலுங்கானா அரசு இந்துக்களின் பல பண்டிகை விடுமுறைகளை ரத்து செய்தது. இது துரதிர்ஷ்டவசமானது. முஸ்லிம் வாக்குகளுக்காக அவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.