நான்டெட்
மராட்டியத்தின் நான்டெட் நகரில் சாக்ஷம் ததே என்ற வாலிபரை ஆஞ்சல் மமித்வார் என்பவர் காதலித்துள்ளார். ஆனால், மமித்வாரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி பையனை காதலிக்க கூடாது என மிரட்டினர். ஆனாலும் இவர்கள் இருவரும் சந்தித்து, காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 27-ந்தேதி மமித்தின் தந்தை மற்றும் சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து, திட்டமிட்டு சாக்ஷமை விரட்டி, கடுமையாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், முகம் அடையாளம் தெரியாத வகையிலும், தலையிலும் கடுமையாக தாக்கி படுகொலை செய்தனர்.
இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த காதலி, காதலரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடினார். கொலையாளிகளான ஹிமேஷ் மற்றும் சாஹிலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவர், தன்னுடைய காதலை மெய்ப்பிக்கும் வகையில் கணவரின் இறந்த உடலை திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில், மமித்வார் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, சாக்ஷமின் வீட்டில் உள்ள நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதுபற்றி சாக்ஷமின் பெற்றோரிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதனை நம்பவில்லை. அதனால், புகுந்த வீட்டில் இருந்து நான் வெளியேறுகிறேன் என கூறினார்.
சாக்ஷம் ததே படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆஞ்சல் மமித்வாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், போலீசாரின் அனுமதியுடனேயே வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், சாக்ஷம் மீது கொண்ட காதல் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.