சண்டிகார்,
பஞ்சாப், அரியானா என 2 மாநிலங்களுக்கும் கூட்டு தலைநகராக சண்டிகார் விளங்குகிறது. தனி யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. கடந்த 1-ந்தேதி, சண்டிகார் யூனியன் பிரதேசத்தை முழுமையாக பஞ்சாப்புடன் இணைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அரியானாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தநிலையில், அரியானா சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், பஞ்சாப் சட்டசபை தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தாக்கல் செய்தார்.
மேலும், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, சீரான தன்மையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானத்தில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள இந்தி பேசும் பகுதிகளை அரியானாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.