புதுடெல்லி,
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் இதுவரை 6.11 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் 2-ம் டோஸை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று செலுத்திக்கொண்டனர். முன்னதாக மந்திரி ஹர்ஷ் வர்தனும் அவரது மனைவி நூதன் கோயலும் கடந்த மார்ச் 2-ம் தேதி தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட நிலையில், 28 நாள்களுக்குப் பிறகு இன்று டெல்லி இதய மற்றும் நுரையீரல் மையத்தில் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டபிறகு சில பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி போட்டபிறகு கொரோனா வந்தாலும் அவர்கள் எளிதாக அதில் இருந்து மீண்டுவிடுகின்றனர். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இப்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் 430 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. கொரோனா பரவலைக் குறைக்க தடுப்பூசி பயன்பாடு தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.