தேசிய செய்திகள்

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை; 6 பேர் பலி

கேரளாவில் மலப்புரம் முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கொச்சி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மரங்கள் வேருடன் முறிந்து விழுந்துள்ளன. வீடுகள் சேதமடைந்து உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கனமழைக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், கன முதல் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று மலப்புரம் முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கேரளாவில் இந்த பருவமழை காலத்தில், முதல் 6 நாட்களில் 44 சதவீதம் அளவுக்கு மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT