தேசிய செய்திகள்

குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை: 22,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வல்சாத்,

குஜராத் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களான வல்சாத், சூரத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

1200 மில்லி மீட்டர் மழை

குறிப்பாக வல்சாத் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பர்கான் தாலுகாவில் புதன்கிழமை காலை முதல் வியாழன் மாலை வரை 36 மணி நேரத்தில் மட்டும் 1200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நவ்சாரி மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி

நவ்சாரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவித்த 50-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் பத்திரமான மீட்டுள்ளனர். வல்சாத்தில் 1200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

தொடர் மழையால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில், வல்சாத்தின் வாபி பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நீரில் மூழ்கின. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தெற்கு மாவட்டங்கள் தவிர, அகமதாபாத் மற்றும் கேடா ஆகிய மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அகமதாபாத்தின் தோல்கா வட்டத்தில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் 339 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அகமதாபாத்தில் பெய்த கனமழையால் பல குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா உறுதி

மழை பாதிப்பு தொடர்பாக மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என பிரதமர் கூறியிருக்கிறார். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், மாநில முதல்-மந்திரி பேசியிருக்கிறார். அப்போது குஜராத் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதியளித்துள்ளார்.