தேசிய செய்திகள்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்

காவிரி ஒழுங்காற்று உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பெங்களூரு,

மேல்முறையீடு

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று கர்நாடக பவனில் சட்டநிபுணர்கள், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டதால், கர்நாடகம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களிடம் போதிய அளவு நீர் இல்லாததால் காவிரி ஒழுங்காற்று உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய நாங்கள் தீர்மானித்து உள்ளோம். அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள், அதிகாரி களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுத்துள் ளோம். வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டர் வசதி

என்னை சந்தித்து பேச தமிழக முதல்-அமைச்சர் விஜய் நமது தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அவருக்கு வழங்க வேண்டிய கவுரவத்தை வழங்கி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளேன். நமது மாநிலத்துக்கு வருகிறேன் என்று சொல்லும் விருந்தினர்களை கவுரவத்துடன் வரவேற்பது நமது கடமை.

அவரை வரவேற்க நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். காவிரி அணை உள்ள பகுதிகளில் ஆய்வு செய்யுமாறு விஜய்யிடம் கூறியுள்ளேன். அதற்கு தேவையான ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுக்கப்படும். அவருக்கு இங்கு உள்ள உண்மை நிலையை தெரிய வேண்டும். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.