தேசிய செய்திகள்

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்டில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

தினத்தந்தி

சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்

இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நீடித்து வருகிறது. ஹேமந்த் சோரன் முதல்-மந்திரி பதவி பறிபோனால் ஆட்சியை தக்கவைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியான பா.ஜனதா வளைக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேரை, அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூருக்கு இடமாற்றியது. கடந்த 30-ந் தேதி முதல் ராய்ப்பூர் அருகே உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் மாநில அரசியலில் நீடித்து வரும் குழப்பத்தை போக்குவதற்காக, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முடிவு செய்தார்.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் அவர் தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோருகிறார். அதன்படி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் நேற்று ராய்ப்பூரில் இருந்து ராஞ்சி புறப்பட்டனர். அதன்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரசை சேர்ந்த சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த கட்சிகளின் தலைவர்கள் சிலர் சிறப்பு விமானம் மூலம் ராஞ்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முன்னதாக சொகுசு ஓட்டலில் இருந்து பஸ் ஒன்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் சட்டசபையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டிரீய ஜனதாதளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.

அதேநேரம் எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு