தேசிய செய்திகள்

உயிரை வாங்கிய 'டிஜிட்டல் அரஸ்ட்': பிணமாக எரியும்போதும் வீடியோ கால் - அதிர்ச்சி சம்பவம்

போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் 'டிஜிட்டல் அரஸ்ட்' (Digital Arrest) எனும் பெயரில் சைபர் கிரிமினல்கள் செய்த சித்திரவதையால், 28 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவரைத் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், தாங்கள் காவல் துறை அதிகாரிகள் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் 'டிஜிட்டல் முறையில் கைது' செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும் கூறியுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் யாரிடமும் பேசக்கூடாது என்றும், 24 மணி நேரமும் வீடியோ காலில் கேமராவிற்கு முன்னால் இருக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர்.

பல நாட்களாகத் தொடர்ந்த இந்த சித்திரவதையாலும், பண மிரட்டலாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தக் கொடுமையின் உச்சகட்டமாக, அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்திலும், அவரது மொபைல் போனுக்கு அந்த சைபர் கும்பலிடமிருந்து தொடர்ந்து வீடியோ கால்கள் வந்துள்ளன.

மனைவியின் உடல் எரியூட்டப்பட்ட பிறகு, மனவேதனையுடன் இருந்த கணவர் அந்த அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் இருந்த கும்பல், மரணமடைந்தவர் குறித்துக் கவலைப்படாமல் அவரது கணவரையும் மிரட்டும் தோரணையில் பேசியுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் மோனிகா எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், ஒரு கும்பல் தன்னைத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வருவதாகவும், மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT