புதுடெல்லி,
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று ஹோலிகா தகனம் நிகழ்ச்சி வட மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மராட்டிய மாநிலம் வொர்லியில் ஹோலிகா உருவ பொம்மையை தீயிட்டு எரித்து இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர். ஹோலி பணிடிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி 'மகிழ்ச்சியின் வசந்தம்' என நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வண்ணங்களும் மற்றும் வைராக்கியத்தால் நிறைந்த இந்தப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியின் வசந்தத்தை கொண்டுவரட்டும். ஹோலிப் பண்டிகை முழு சூழலையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது. இதுவே இந்த பண்டிகையின் மிகப்பெரிய சிறப்பு. வண்ணங்கள் எங்கும் சிதறிக்காணப்படுவது அனைவரையும் உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் நனையச் செய்கிறது” என கூறியுள்ளார்.