தேசிய செய்திகள்

வாடகைக்கு குடியிருந்தவரின் 10 வயது மகளை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த வீட்டு உரிமையாளர் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் கோவர்தன் பகுதியில், 10 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டு உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 42 வயது நபர், உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வாடகை வீட்டில் ஒரு தம்பதியும், அவர்களது 10 வயது மகளும் குடியிருந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தொடர்ச்சியாக வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் இந்த செயலை அவர் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், சிறுமியின் தாய் உடனடியாக இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.