தேசிய செய்திகள்

சோனியா காந்தி உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை

சோனியா காந்தி நேற்று முன் தினம் இரவு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவுமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சோனியா காந்தியின் உடல்நிலையில் கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து இன்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.