தேசிய செய்திகள்

கறிக்குழம்பு சமைக்காததால் பெண்ணை கொன்ற கணவர் கைது... அதிர்ச்சி சம்பவம்

ரஷீத் கூலி வேலை செய்து வந்தார்.

மலப்புரம்,

இறைச்சி உணவு

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியை சேர்ந்தவர் பசிலா (வயது 38). இவரது கணவர் ரஷீத் (44). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ரஷீத், கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு மனைவியிடம் கூறி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார்.

அப்போது ரஷீத் கூறியவாறு, பசிலா கறிக்குழம்பு சமைத்து வைக்கவில்லை என தெரிகிறது. இதனால் தான் கூறி விட்டு சென்றும் இறைச்சி உணவு சமைக்கவில்லை என்பதால், ரஷீத் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷீத், கத்தியால் பசிலாவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

கணவர் கைது

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, பசிலாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும். பலனின்றி அவர் இறந்தார். தகவல் அறிந்த வண்டூர் போலீசார் பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கணவர் கூறியவாறு இறைச்சி உணவு சமைக்காததால், பசிலாவை ரஷீத் கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரஷீத்தை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஊர் மக்கள் கூறும்போது, ரஷீத் மது குடித்து வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT