தேசிய செய்திகள்

'குழந்தை வேண்டாம்' என தகராறு.. கழுத்தை நெரித்து கர்ப்பிணியை கொல்ல முயன்ற கணவர்

குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என அவர் சண்டை போட்டதால். ஏற்கனவே இருந்த 2 மனைவிகளும் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

சிக்கபானவாரா,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குழந்தை வேண்டாம் என தகராறு செய்ததுடன், கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

2 பெண்களுடன் திருமணம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபானவாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா ரோட்டில் வசித்து வருபவர் முகமது பீர்(வயது 40). இவரது மனைவி ஹசீனா (35). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. முகமது பீர், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தி ருந்தார். ஆனால் தனது முதல் மற்றும் 2-வது மனைவியை முகமது பீர் பிரிந்து விட்டார்.

குழந்தை

தற்போது ஹசீனாவை 3-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், ஹசீனா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு குழந்தை வேண்டாம் என்று மனைவி ஹசீனாவிடம் முகமது பீர் கூறியுள்ளார். மேலும் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி மனைவியிடம் அவர் வற்புறுத்தியுள்ளார்.

தப்பி ஓட்டம்

இதனை ஏற்க ஹசீனா மறுத்து விட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஹசீனாவின் கழுத்தை முகமது பீர் நெரித்துள்ளார். இதன் காரணமாக அவர் மயக்கம் அடைந்துள்ளார். ஆனால் தனது மனைவி இறந்து விட்டதாக நினைத்து வீட்டில் இருந்து முகமது பீர் தப்பி ஓடிவிட்டார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து ஹசீனா எழுந்தார். அப்போது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சித்தது குறித்து குடும்பத்தினரிடம் ஹசீனா தெரிவித்தார். உடனே குடும்பத்தினர் விரைந்து வந்து ஹசீனாவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி சிக்கபானவாரா போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

கணவர் கைது

அதில், குழந்தை வேண்டாம் எனக்கூறி முகமது பீர் சண்டை போட்டதுடன், ஹசீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து விட்டதாகவும் ஹசீனாவின் குடும்பத்தினர் கூறினர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என முகமது பீர் சண்டை போட்டதால் தான், ஏற்கனவே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த முகமது பீரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.