தேசிய செய்திகள்

ஆமைக்கறி வறுவல் கருகியதால் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் - ஒடிசாவில் சம்பவம்

ஒடிசாவில் ஆமைக்கறி வறுவல் கருகியதால் மனைவியை கணவர் அடித்துக்கொலை செய்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தில் உள்ள ரவுத்பாரா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் பாடிங் என்பவரது மனைவி சாவித்திரி (வயது 35).

இதுகுறித்து அந்த பெண்ணின் தாயின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக குறிப்பிட்ட பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது அவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அவர், வீட்டுக்கு ஒரு ஆமையை கொண்டுவந்து சமைக்கும்படி மனைவியிடம் கொடுத்திருக்கிறார். அவர் அதன் கறியை வறுவல் செய்தபோது லேசாக கருகிவிட்டதாம். மதுபோதையில் இருந்த கணவர், ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

அதில் அவர் மயங்கிவிழுந்த நிலையில் அப்படியே போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் கணவர் வீட்டுக்கு திரும்பிவந்தபோது மனைவி இறந்துகிடந்தார்.

அவரது உடலை வீட்டுக்கு பின்புறத்திலேயே குழிதோண்டிப் புதைத்துவிட்ட அவர், மனைவி சண்டையில் கோபித்துக்கொண்டு போய்விட்டதாக எல்லோரிடமும் கூறியிருக்கிறார். தற்போது போலீஸ் விசாரணையில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

கணவரை கைது செய்த போலீசார், மனைவியின் உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

SCROLL FOR NEXT