தேசிய செய்திகள்

கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை; ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு - கேரளம் ஐகோர்ட்டு உத்தரவு

அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு விடுப்பு தர மறுப்பது பாரபட்சமான செயல் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

பெரும்பாவூர்,

கர்ப்பப்பை அகற்ற சிகிச்சை பெறும், ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு பெறுவதற்கு தகுதி உண்டு என்று கேரளம் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவ விடுப்பு

கேரளம் ஐகோர்ட்டில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை சிறப்பு பயிற்சியாளர்களான நிஷா ஜோஸ், மோளி ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையை தொடர்ந்து நாங்கள் சமர்ப்பித்த மருத்துவ விடுப்பு விண்ணப்பத்தை கேரளம் அரசு நிராகரித்தது. ஒப்பந்த ஊழியர்கள் பிரசவ விடுமுறை பெறுவதற்கு தகுதி உள்ளது. ஆனால், கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை பெறுவதற்கு ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு ஐ.சி.பி.ஆர். சட்டம் 101-ஏ பிரிவின் படி, இந்த சலுகையை வழங்க இயலாது என்று அரசு தெரிவித்தது. எனவே, அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை

இந்த மனுவை நீதிபதி ஹரிசங்கர் வி.மேனன் விசாரித்தார். அப்போது அவர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றும் (ஹிஸ்டிரக்டமி) சிகிச்சை பெறும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 45 நாட்கள் விடுப்பு பெறுவதற்கு தகுதி உண்டு. பிரசவம், கருக்கலைப்பு ஆகியவற்றை தொடர்ந்து விடுமுறை அனுமதித்தாலும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு விடுப்பு தர மறுப்பது பாரபட்சமான செயல் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

தொடர் நடவடிக்கை

பெண்களின் உடல்நிலை தொடர்பான தேவைகளை பரிசீலித்து, அதற்குரிய சலுகைகளை வழங்குவதில் ஒப்பந்த ஊழியர்கள் என்ற காரணத்தால் மறுப்பது ஏற்புடையதல்ல. பிரசவ விடுமுறை, கருக்கலைப்பு மூலம் ஏற்படும் உடல் உபாதைகளுக்கான விடுமுறை ஆகியவற்றை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கி 2021-ம் ஆண்டு மாநில அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது. அதன் அடிப்படையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யும் பெண்களுக்கு, அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும் விடுப்பு வழங்க வேண்டும். அதோடு மனுதாரர்கள் சமர்ப்பித்த விடுப்பு விண்ணப்பத்தை 4 மாதங்களுக்குள் பரிசீலித்து தொடர் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.