ஐதராபாத்,
பெற்றோர் தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையில் பெரிய கல்லூரிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், சில மாணவர்கள் படிப்பை புறக்கணித்து மொபைல், ரீல்ஸ், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழித்து தங்களது எதிர்காலத்தை கெடுத்துகொள்கிறார்கள்.
தேர்வை சரியாக எழுத முடியாத இத்தகைய மாணவர்கள், பல்வேறு வழிகளில் ஆசிரியர்களிடம் பாஸ் செய்ய வேண்டி முயற்சி செய்வதும் வழக்கமாக உள்ளது. சிலர் பதில் தாளில் பணம் வைப்பது போன்ற சம்பவமும் நடக்கின்றது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் முடிந்த இன்டர்மீடியட் தேர்வுகளின் மதிப்பீட்டின்போது அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதிப்பீட்டாளர்கள் பதில் தாள்களை திருத்தும் போது, ஒரு மாணவர் எழுதியிருந்த வாசகங்கள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த மாணவர், “சார்… எனக்கு அம்மா, அப்பா இல்லை. நீங்கள்தான் எனக்கு எல்லாம். தயவு செய்து என்னை பாஸ் பண்ணுங்கள். நான் படித்தது தேர்வில் வரவில்லை. நீங்கள் தான் என் கடவுள்” என்றும் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கும் மாணவர் உருவத்தை வரைந்து, அதற்கு அருகில் ‘சார்’ மற்றும் ‘நான்’ என குறிப்பிட்டிம் இருந்தார். இந்த பதில் தாளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.