தேசிய செய்திகள்

பதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை: ராஜினாமாவுக்கு பிறகு மெகபூபா முப்தி பேட்டி

பதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை: ராஜினாமாவுக்கு பிறகு மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியது. சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியில் மனகசப்பு அதிகரித்துக்கொண்டே இருந்து வந்தது.

மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பாஜக அறிவித்தது. அதோடு, அக்கட்சிக்கும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் பாரதீய ஜனதா காஷ்மீர் கவர்னருக்கு கடிதம் அளித்தது. இதையடுத்து, மெகபூபா முப்தியும் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மெகபூபா முப்தி கூறியதாவது:- பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.

இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை நடந்துள்ளது.எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். மேலும், எந்த கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும். பலப்பிரயோகம் மிக்க பாதுகாப்பு கொள்கை ஜம்மு காஷ்மீரில் உதவாது என்று எப்போதும் நாங்கள் கூறி வருகிறோம். சமரச கொள்கையே முக்கிய பங்கு வகிக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT