தேசிய செய்திகள்

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு சென்ற போது மாயமானது. விமானம் மாயமாகி 5 நாட்கள் ஆகியும் விடை கிடைக்கவில்லை. சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே ஆளில்லா விமானங்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

விமான ஆராய்ச்சி மையத்தின் 5000 கண்காணிப்பு விமானங்கள், NTRO உளவு செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட உபகரணங்களை விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் விமானப்படை நிறுத்தியுள்ளது. இவற்றில் உள்ள சிறப்பு சென்சார் மூலம் தரைப்பகுதியில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்க முடியும். இதன் மூலம் நிலையை அறியலாம் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தை தேடும் பணியில் ஒவ்வொரு நடவடிக்கையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. விமானத்தை கண்டுபிடிக்க தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.