மும்பை,
செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஐ.டி மும்பை பட்டதாரியான ரிஷப் அகர்வால், மெட்டா நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாய் சம்பள வேலையை நிராகரித்து, சொந்தமாக ஏ.ஐ. நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 33-வது இடம்பெற்ற ரிஷப் அகர்வால், கூகுள் பிரைன், டீப்மைண்ட், வேமோ உள்ளிட்ட முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் பணியாற்றியவர். பின்னர் மெட்டா நிறுவனத்தில் சேர்ந்த அவருக்கு ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கொடுக்க முன்வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்காமல், அவர் 'பீரியாடிக் லேப்ஸ்' என்ற ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை இணை நிறுவனராக தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ரிஷப் அகர்வால் கூறுகையில், "மெட்டா நிறுவனம் வழங்க முன்வந்த தொகை, குறிப்பிடப்பட்டுள்ள 1 மில்லியன் டாலரை விட பல மடங்கு அதிகம்" என்றார். எனினும், தனக்கு வழங்கப்பட்ட சம்பள சலுகையின் சரியான மதிப்பை அவர் வெளியிடவில்லை. ரிஷப் அகர்வாலின் இந்த முடிவு தொழில்நுட்ப துறையில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில்முனைவு முயற்சியில் அவர் எடுத்துள்ள துணிச்சலான முடிவுக்கு பலரும் சமூக வலையதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர் நிகேஷ் அரோராவும் அவரை பாராட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களை தக்கவைத்துக்கொள்ள உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய தயாராக இருப்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.