புதுடெல்லி,
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமலாக்கத்துறையானது பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்தபடி தன் மீதான வழக்கு விவரங்களை கவனித்து வரும் விஜய் மல்லையா அவ்வப்போது தனது கருத்துக்களை டுவிட்டர் மூலமாக வெளியிட்டு வருகிறார். அண்மையில் தான் கடன் வாங்கவில்லை எனவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே, கடனை செலுத்தாமல் தப்பி ஓடுவோரை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள நிலையில், மல்லையா தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி உதைப்பதாகவும் கூறியுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை மற்றும் அவரை பிரிட்டனில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லையா, எனக்கு எதிராக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் ஒரு கால்பந்து. இரண்டு கடுமையான போட்டி கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் என்னை வைத்து விளையாடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக நடுவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.