புதுடெல்லி:
இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தற்போது, சுப்ரீம் கோர்ட்டில் ஒன்பது நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது, ஏனெனில் கடந்த ஓரிரு வருடங்களில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றனர், சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் ஐகோர்ட் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வரும் நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி. நாகரத்னா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-இல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பி.வி. நாகரத்னா. இவர் பின்னர் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால் இந்தியா சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது. இவரது தந்தை ஈ.எஸ். வெங்கட்ராமைய்யா 1989 -ஜூன் முதல் டிசம்பவர் வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.