புதுடெல்லி,
பீகாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விகாஷ் குமார் என்பவர் யு.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு எழுத தனக்கு உதவியாளர் நியமிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு கூறியது..
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கக்கூடாது, தேர்வு எழுத முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்க வசதி செய்யும் வழிமுறைகளை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளும் வாழ்க்கையில் பிறரைப்போல முன்னேற்றம் காண சமூக சூழல் உருவாக வேண்டும். இதன்படி டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை ஏற்கிறோம் இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.