அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் 4 மாதங்களுக்குள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் இந்தியா-நேபாள எல்லையில் உள்ள போரஸ் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தெரியவந்தது. அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் அயோத்தியில் பதுங்கியிருக்கலாம் என தெரிகிறது.
உளவுத்துறையினரும், பாதுகாப்பு படையினரும் அந்த 7 பயங்கரவாதிகளையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பயங்கரவாதிகளில் 5 பேர் முகம்மது யாகூப், அபு ஹம்சா, முகம்மது ஷாபாஸ், நிசார் அகமது, முகமது காவ்மி சவுதாரி என தெரியவந்தது.
அந்த பயங்கரவாதிகள் உள்ளூரில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் உதவியுடன் அடிக்கடி இடம் மாறி வருவதாகவும், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தனது படையினருக்கு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
எனவே அயோத்தியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக் கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் போலீசாரால் கடுமையாக சோதனை செய்யப்படுகிறது.