தேசிய செய்திகள்

பா.ஜனதாவில் இதுவரை 306 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

பா.ஜனதா இதுவரை வெளியிட்ட 7 பட்டியல்கள் மூலம் 306 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில் தொடக்க கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

இதில் ஆளுங்கட்சியான பா.ஜனதாவை பொறுத்தவரை 7 பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி வெளியிட்ட முதல் பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), கட்சி தலைவர் அமித்ஷா (காந்திநகர்) உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றன. பின்னர் டையூ, டாமன் தொகுதிக்கான வேட்பாளர் அடங்கிய 2-வது பட்டியலும் அன்றைய தினமே வெளியானது.

இதைத்தொடர்ந்து 22-ந் தேதி 3 பட்டியல்களும், 23-ந் தேதி மற்றும் நேற்று தலா ஒரு பட்டியலுமாக மொத்தம் 7 பட்டியல்களை பா.ஜனதா இதுவரை வெளியிட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 306 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் முதல் 2 கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதுவரை வெளியிட்டுள்ள பட்டியல்களில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தவிர மேலும் சில நட்சத்திர வேட்பாளர்கள் அடங்கி உள்ளனர். அந்த வகையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாகிப்), பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா (புரி) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதைப்போல நரேந்திர சங் தோமர் (மொரேனா), ஜெயந்த் சின்கா (ஹசாரிபாக்), ஸ்ரீபாத் நாயக் (வடக்கு கோவா) ஆகிய மந்திரிகளும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனுராக் தாகூர் ஹமிர்பூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.

அதேநேரம் தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்து வரும் சுமார் 50 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி மற்றும் சத்ருகன் சின்கா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இதைப்போல சத்தீஷ்கார் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங்கின் மகன் அபிஷேக் சிங்குக்கு மீண்டும் போட்டியிட சீட் மறுக்கப்பட்டு உள்ளது. அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள 9 எம்.பி.க்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கட்சி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் பா.ஜனதாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சத்ருகன் சின்கா காங்கிரஸ் சார்பில் தனது பாட்னா சாகிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து களமிறங்குவார் என தெரிகிறது.

தற்போதைய எம்.பி.க் களுக்கு மீண்டும் சீட் வழங்கும் விவகாரத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழு சில தொகுதிகளில் கடுமையாகவும், சில தொகுதிகளில் தாராளமாகவும் நடந்து கொண்டிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். வருகிற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதால் அதற்கு தகுந்தாற்போல வேட்பாளர் தேர்வு நடந்து வருவதாக கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு