காந்திநகர்,
குஜராத்தில் கல்வி மந்திரி புபேந்திரசின்ஹ் சுதாசமா நடத்திய ஆய்வு கூட்டத்தின் முடிவில் பள்ளி கூடங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க முடிவானது. இதனை தொடர்ந்து குஜராத் முதன்மை கல்வி இயக்ககம் மற்றும் குஜராத் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
குஜராத் அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள், வருகை பதிவின்பொழுது உள்ளேன் ஐயா அல்லது ஆம் ஐயா என கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவானது புது வருட தொடக்க நாளான ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும். இதனை அனைத்து கல்வி அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.