பெங்களூரு,
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசும் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதில், பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 521 பேர் நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில், 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தார்வாத் (119 பேர்), கலபுரகி (102 பேர்) ஆகியவை உள்ளன.
அதிக அளவு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தார்வாத் (8 பேர்) நகர் முதல் இடம் பிடித்து உள்ளது. தொடர்ந்து ராமநகர் (5 பேர்), கலபுரகி (4 பேர்), தட்சிண கன்னடா (4 பேர்) ஆகியவை உள்ளன. இதுவரை இந்நோய்க்கு 1193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.