தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.

ஜம்மு காஷ்மீர்,

நாட்டின் குடியரசு தினம் வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.

இதில், ராணுவ வீரர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 200 அடி பள்ளம் என்பதால், மீட்புப் பணி சவாலாக இருந்தது. என்றாலும், துரிதமாக செயல்பட்டு காயம் அடைந்த 7 ராணுவ வீரர்களும் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT