மொராதாபாத்,
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட மெகந்தி ராம்பூர் கிராமத்தை சேர்ந்த முகமது ரபி என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் குந்த்ராகி பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்த கார் குந்த்ராகி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மரம் ஏற்றி வந்து கொண்டிருந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த முகமது ரபி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர். காரை ஓட்டிச்சென்ற டிரைவர் படுகாயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.