தேசிய செய்திகள்

அதிக நகை அணிந்து வந்தவரிடம் வருமான வரி சோதனை; கவரிங் என தெரியவந்ததால் அதிகாரிகள் ஏமாற்றம்

கவரிங் நகைகளை அணிந்தவாறு அவர் 'கெத்து' காட்டி வந்தது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது.

நகரி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்டு சிட்டி (பாதபஸ்தி) பகுதியை சேர்ந்தவர் சூர்யாபாய். நடமாடும் தங்க மாளிகை என்று சொல்லும் அளவுக்கு கழுத்திலும் கைகளிலும் நகைகள் அணிந்திருப்பார். இவர் திருப்பதி கோவிலில் சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை பார்த்து ஆச்சரியப்பட்ட சக பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுதொடர்பான வீடியோ சமூ கவலைத்தளங்களில் பரவியது. இவரது கூட்டாளியான ஐதராபாத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும் இதேபோல் அதிக நகை அணிந்தவாறு டெல்லி சென்றுள்ளார். அவரை வருமானவரித்துறையினர் மடக்கி விசாரித்த போது அவர் அணிந்திருந்த நகைகளில் ஒரு கிலோ நகைக்கு முறையான கணக்கு காட்டவில்லை.

அவரது செல்போனில் சூர்யாபாயின் படமும், தொலைபேசி எண்ணும் இருந்தது. இதனையடுத்து ஐதராபாத் வருமான வரித்துறை அதிகாரிகள் சூர்யாபாயை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் அணிந்திருந்த நகைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இந்த கவரிங் நகைகளை அணிந்தவாறு அவர் 'கெத்து' காட்டி வந்தது தெரியவந்தது. உண்மையான நகைகள் என்று நினைத்த அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.