நகரி,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாகோலில் இருந்து ராயதுர்கம் நோக்கிச் சென்ற மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ஆண் ஒருவர், தனது காலை ஜன்னல் கண்ணாடி மீது வைத்தபடி அமர்ந்திருந்தார். அவரது இந்த செயலைக் கண்ட சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாத அவர், “நான் இப்படித்தான் அமர்வேன்; உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பயணிகளில் ஒருவர் மெட்ரோ நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ராயதுர்கம் மெட்ரோ நிலையத்தில் அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், ராயதுர்கம் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. விசாரணையின்போது, தனது பெயர் சைதன்யா என அவர் தெரிவித்தார்.
இந்த ஒழுங்கீன செயலுக்காக மெட்ரோ ரெயில் விதிகளின்படி ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டதாக ஐதராபாத் மெட்ரோ ரெயில் லிமிடெட் (எச்.எம்.ஆர்.எல்.) பாதுகாப்புத் துறை பொது மேலாளர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்தார். மெட்ரோவில் சமூகப் பொறுப்பின்றி நடந்துகொண்ட அந்த பயணியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது நடவடிக்கையை பலரும் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.