புதுடெல்லி,
`ஷெஸாத் பாட்டி நெட்வொர்க்' என்கிற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக நாடு முழுவதும் 14 மாநிலங்களில் தேசிய முகமைகள் அதிரடி சோதனை நடத்தியத்தியதில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஐஎஸ்ஐ அமைப்பின் நிதியுதவியுடன் இயங்கும் 'ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்' என்ற பயங்கரவாத அமைப்பு, நாடு முழுவதும் சுதந்திர நாளன்று கையெறி குண்டு, ஐஇடி குண்டு, பெட்ரோல் குண்டு உள்ளிட்டவை பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதற்காக காவல்துறை பாதுகாப்பு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கவும், உளவு பார்ப்பதற்காகவும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தும் உள்ளூர் நபர்களுக்கு பணம் வழங்கி திட்டமிட்டு வந்தது.
இதனை அறிந்த இந்திய உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் மூலம் ஆகஸ்ட் 12 -ம் தேதி ஒரே நாளில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்ட பதிவில்,
நாட்டின் 80-தாவது சுதந்திரதினத்தை சீர்குலைக்கும் வகையில், ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் இயங்கும் 'ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்' என்ற பயங்கரவாத அமைப்பை பிரதமர் மோடி அரசு அழித்தது. 200-க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்களைக் கைது செய்ததன் மூலம், நாசவேலைத் தாக்குதல்களுக்கான அக்குழுவின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
14 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகள் இக்கட்டமைப்பைச் சிதைத்தன.
ஐஎஸ்ஐ அமைப்பின் நிதியுதவி பெற்ற இக்குழுவிடமிருந்து ஐஇடி-கள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், உளவு பார்ப்பதற்கான சிசிடிவி கேமிராக்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யில் 62, அரியானாவில் 52, டெல்லியில் 51, பஞ்சாபில் 44, ராஜஸ்தானில் 15, மராட்டியத்தில் 8, உத்தரகாண்டில் 5, கர்நாடகம், பீகார் மற்றும் குஜராத்தில் தலா 3, தெலுங்கானா, இமாசல், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளத்தில் தலா 2 என 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.