புதுடெல்லி,
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் பிரபல சம்சங் செல்போன் நிறுவனத்தின் தொழிற்சாலை 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இதை, பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் இணைந்து துவக்கி வைத்தனர். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் திறனை கொண்டதாகும்.
பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இண்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டா நகரில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரிய நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உள்ளது.
நான் சில தொழிலதிபர்களை சந்திக்கும்போது, நடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என நான் குறிப்பிடுவது உண்டு. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகின் 2-வது மிகப்பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.