புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் இன்று 34-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜனதாவுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நேற்று இரவிலும் கூட ஜந்தர் மந்தரை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் கூட்டம் ஜந்தர் மந்தருக்கு செல்ல வழி கேட்டு நின்று கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த பகுதியில் செல்போன் பயன்பாடு செயலிழக்க செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் சிலரது தரப்பிலிருந்து புகார்கள் வந்தன.
இதற்கிடையே போராட்டத்தை கைவிட மத்திய அரசு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தை இனி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திலேயே நடைபெற வேண்டும் என போராட்ட அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன் ராகுல் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள். திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் காந்தி நினைவிடம் செல்ல பஸ்சில் புறப்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக ராகுல் தலைமையில் காந்தியடிகளின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ராகுல் தலைமையில் சென்ற எதிர்க்கட்சியினர், எம்.பிக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் டெல்லியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ராகுல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: -
மாணவர்கள் சாலையில் போராடுகின்றனர். எனவே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் சாலையில் இருக்க வேண்டும் என நினைத்தோம். அனைத்து எம்,பி,ம்க்களும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். போலீசார் அனுமதி மறுத்தனர். இதன் பிறகு காந்தி நினைவிடம் செல்ல வேண்டும் என்றோம்.ஆனால், நாங்கள் வந்த பேருந்தை இங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இதன் மேல் எங்களால் செல்ல முடியவில்லை. ஆனால், மாணவர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, டெல்லியில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்துக்கு பேரணியாக சென்றார் ராகுல். நீட் வினாத்தாள் கசிவால் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்துக்கு தடையை மீறிச்சென்று தேசிய கீதம் பாடிய எம்பிக்களால் பரபரப்பு ஏற்பட்டது.