டெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில், 11 இந்திய மாலுமிகளுடன் ஓமன் அருகே ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சைப்ரஸ் நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 11 இந்திய மாலுமிகளில் 10 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், மாயமான ஒரு இந்தியரின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் மாயமான இந்தியரை மீட்கும் பணியில் ஓமன் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.