புதுடெல்லி,
ஈரானின் ஆதரவோடு ஏமன் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு, நேற்று சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் சில பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்தது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மேற்காசியாவில் மேலும் போர் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை அமெரிக்கா அதிகரித்து வரும் வேளையில், சவூதி எண்ணெய் கிடங்குகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசம் மீதான தாக்குதல்களையும், குறிப்பாக பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களையும் இந்தியா கண்டிக்கிறது.
மத்திய கிழக்கின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும், பாப்-எல்-மண்டேப்(Bab-el-Mandeb) பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்” என்று தெரிவித்தார்.