புதுடெல்லி,
காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே பல அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை நடந்த இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "காபூலில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகி, பலரைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.