புதுடெல்லி,
டெல்லியில், புத்த பூர்ணிமாவையொட்டி, மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, புத்தரின் 2,562-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த புத்த துறவிகளுக்கு அவர் புனித வஸ்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது.
புத்தரின் போதனைகள், மனிதாபிமானம், கருணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. இவை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. இந்த போதனைகள் புத்தரால் உலகம் முழுவதும் பரவியதால், இந்தியாவின் குணநலன் பற்றி உலகம் அறிந்து கொண்டது.
புத்தரின் போதனைகள் இந்தியாவில் இருந்து உதயமானது என்பதில் இந்தியா பெருமைப்படுகிறது. இந்தியா, மதங் களிடையே பாகுபாடு காட்டியது இல்லை. எல்லா மதத்தினரும் அவரவர் நம்பிக்கையை பின்பற்ற உரிமை உண்டு.
இந்தியா பிற நாடுகளையோ, அவர்களின் சித்தாந்தங்களையோ தாக்கியதாக வரலாறு இல்லை. இந்த கொள்கையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.