தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ஓயவில்லை - மத்திய சுகாதாரத்துறை

உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை உச்சம் பெற்று தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், கேரளா, அருணாசல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஷ்கர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் தொடர்ந்து காணப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதையடுத்து, தற்போதைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த வாரத்தைவிட கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 46,000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

71 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது.

உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக அமெரிக்காவில் 32.8 கோடி, இங்கிலாந்தில் 7.79 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களில் 14 நாள்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் ஓயவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.