புதுடெல்லி,
ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானில் இருந்து நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்த அவர், ஐதராபாத்தில் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்ட அவர், சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு வந்த ரவுகானி, இன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ஈரான் அதிபர் ரவுகானி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் ஆற்றல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிராந்திய விவகாரங்கள், அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு, வர்த்தகம்,பாதுகாப்பு, நாட்டின் ஆற்றல் ஆகிய முக்கிய பகுதிகளை முன்னேற்றும் பொருட்டு, இரட்டை வரி விலக்கு உட்பட 9 ஒப்பந்தங்கள் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கையெழுத்தாகின.
முன்னதாக கூட்டுப்பத்திரிக்கை நிகழ்வில் ரவுஹானியுடன் உரையாற்றிய மோடி,நாட்டின் ஒற்றுமை உட்பட முக்கிய அம்சங்களின் ஒத்துழைப்பை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பதை இருவரும் பரிமாறிக் கொண்டோம். மேலும் பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் முதலிய பிற சவால்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். ஈரான் அதிபர் கூறுகையில், நாங்கள் நாட்டின் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்து தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் என அறிவித்தார்.
இரு நாட்டுத்தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, இணைப்பு, ஆற்றல், பிராந்திய பிரச்சனைகள் போன்ற பயனுள்ள பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளனர் என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும், ஈரான் அதிபரை சந்தித்து பேசினார்.