தேசிய செய்திகள்

இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இரு நாடுகளும், ஜப்பானிய மதிப்பின்படி 10 டிரில்லியன் யென் அளவிலான முதலீடுகளை மேற்கொள்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

புதுடெல்லி

இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக தலைநகர் புதுடெல்லிக்கு நேற்று வருகை தந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சந்தூர் எனப்படும் இந்திய பாரம்பரிய இசைக்கருவியை இசைத்து மகிழ்ந்த ஜப்பான் பிரதமர் தகாய்ச்சிக்கு அதனை வாசிப்பது எப்படி? என்று பிரதமர் மோடி கற்றுக்கொடுத்தார்.

கூட்டு பொருளாதார மாநாடு

இருவரின் சந்திப்பு பற்றி ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியின் ஊடக செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளரான தோஷிஹிரோ கிடமுரா கூறும்போது, கூட்டு பொருளாதார மாநாடு இன்று நடந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என கூறினார்.

பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்டு மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளும், ஜப்பானிய மதிப்பின்படி 10 டிரில்லியன் யென் அளவிலான முதலீடுகளை மேற்கொள்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த முதலீட்டு திட்டங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம் என்றார்.