டெல்லி,
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2006ம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளை கொண்ட பிரிக் கூட்டமைப்பு உருவானது. இந்த கூட்டமைப்பில் 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. இதனை தொடர்ந்து இந்த கூட்டமைப்பிற்கு பிரிக்ஸ் என பெயரிடப்பட்டது.
பொருளாதாரம், வர்த்தகம், சர்வதேச அரசியல் உள்பட பல்வேறு விவகாரங்களில் முன்னேற்றத்தை கொண்டுவரும் நோக்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துகொண்டன. இதையடுத்து, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
பிரிக்ஸ் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.
அதேவேளை, பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைமையில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கருப்பொருள் விவாதிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இதனிடையே பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று மற்றும் நாளை என மொத்தம் 2 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு என்ற கருப்பொருளை கொண்டு நடப்பு ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டின் இறுதியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கை வெளியாக உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கூட்டறிக்கையை இந்தியா வெளியிட உள்ளது.
* இந்திய பிரதமர் - நரேந்திர மோடி
* ரஷிய அதிபர் - விளாடிமிர் புதின்
* சீன அதிபர் - ஜி ஜின்பிங்
* தென் ஆப்பிரிக்க அதிபர் - சிரில் ராமபோசா
* பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி - மவுரோ வெய்ரா
* ஈரான் அதிபர் - மசூத் பெசஸ்கியான்
* எகிப்து அதிபர் - எல் சிசி
* இந்தோனேசிய அதிபர் - பிரபோவா சுபியாந்தோ
* எத்தியோப்பியா பிரதமர் - அபே அகமது அலி
* மலேசியா பிரதமர் - அன்வர் இப்ராகிம்
* சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி - பைசல் பின் பர்கன் அல் சவுத்
* ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் - ஷேக் கலீத் பின் முகமது பின் சயது அல் அயான்
* உகாண்டா துணை அதிபர் - ஜெசிகா அலொபோ
* நைஜீரியா துணை ஜனாதிபதி - கசீம் ஷெடிமா
* கியூபா வெளியுறவுத்துறை மந்திரி - புருனோ ரெட்ரிகியூஸ் பரிலா
* பெலாரஸ் வெளியுறவுத்துறை மந்திரி - மெக்சிம் ரெசன்கொவ்
* வியட்நாம் பிரதமர் - லி மின் ஹங்
* கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ்
* ஐநா சபையின் தலைவர் - அன்டோனியோ குட்டரெஸ்
ஆகியோர் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.