புதுடெல்லி,
நமது நாட்டில் கடந்த 11-ந் தேதி 13 ஆயிரத்து 91 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 516 ஆக குறைந்தது. நேற்று இது மேலும் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 850 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது (கேரளாவில் மட்டுமே 6,674 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்). இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 11 ஆயிரத்து 271 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 271 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,37,307 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,37,859 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.26 % ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,35,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,12,01,03,225 பேக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,43,840 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,55,904 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 62,37,51,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.