தேசிய செய்திகள்

6 ஆயிரம் நிறுவனங்களின் வெளிநாட்டு உதவி பெறும் உரிமம் ரத்து: மத்திய அரசு

நேரு நினைவு அருங்காட்சியகம், இந்திய மருத்துவ சங்கம் உள்பட சுமார் 6 ஆயிரம் நிறுவனங்களின் வெளிநாட்டு உதவி பெறும் உரிமத்தை மத்திய அரசு ரத்து சய்துள்ளது.

எப்.சி.ஆர்.ஏ. உரிமம்

இந்தியாவில் இயங்கி வரும் எந்த அமைப்போ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமென்றால், வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த உரிமத்தை தகுந்த காலத்தில் புதுப்பிக்கவும் வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் 18,778 நிறுவனங்களின் உரிமம் கடந்த 2020 செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 (நேற்று முன்தினம்) இடையே காலாவதியாகி உள்ளது. இதில் 12,989 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது எப்.சி.ஆர்.ஏ. உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தன.

விண்ணப்பம் நிராகரிப்பு

ஆனால் 5,789 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த உரிம புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே இந்த நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதைத்தவிர எப்.சி.ஆர்.ஏ. உரிமம் புதுப்பிக்கக்கோரி விண்ணப்பித்த 179 நிறுவனங்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த நிறுவனங்களின் உரிமமும் ரத்தாகி உள்ளன.

இந்திய மருத்துவ சங்கம்

இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் எப்.சி.ஆர்.ஏ. உரிமங்களை இழந்துள்ளன. நேற்று முன்தினம் வரை 22,762 நிறுவனங்கள் மேற்படி உரிமம் வைத்திருந்த நிலையில், நேற்று முதல் வெறும் 16,829 நிறுவனங்கள் மட்டுமே இந்த உரிமம் பெற்ற நிறுவனங்களாக இருக்கின்றன. இவ்வாறு எப்.சி.ஆர்.ஏ. உரிமம் ரத்தான நிறுவனங்களில் பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் டெல்லி ஐ.ஐ.டி., ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய வாழிட மையம், லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி மற்றும் டெல்லி என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை முக்கியமானவை ஆகும்.

இம்மானுவேல் ஆஸ்பத்திரி சங்கம்

மேலும் இந்திரா காந்தி தேசிய கலை மையம், லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, ஆக்ஸ்பார்ம் இந்தியா, இம்மானுவேல் ஆஸ்பத்திரி சங்கம், இந்திய காசநோய் சங்கம், மகரிஷி ஆயுர்வேத பிரதிஸ்தான், தேசிய மீனவர் கூட்டுறவு கூட்டமைப்பு போன்ற அமைப்புகளும் தங்கள் உரிமத்தை இழந்திருக்கின்றன. இதைப்போல இந்திய இஸ்லாமிய கலாசார மையம், கோத்ரெஜ் நினைவு அறக்கட்டளை, டெல்லி பொது பள்ளி சமூகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அணுசக்தி அறிவியல் மையம் உள்ளிட்ட நிறுவனங்களும் அங்கீகாரம் ரத்தான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரம் நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ. உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்