புதுடெல்லி,
கடந்த மே மாதம் இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 1,400 பேரின் தகவல்களை திருடியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடக்கம் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வாட்ஸ்-அப் நிறுவனம் கூறியிருந்தது.
இந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டது என்றும், இதுபற்றி இந்தியா மற்றும் இதர நாட்டு அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் பதில் அளித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இலங்கையில் நடந்த காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாம் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) யுகத்தில் வாழ்கிறோம், டிஜிட்டல் பொருளாதாரத்தில் தரவுகள் மிக முக்கியமான பங்கை வகிக்கப் போகிறது. தனி நபர் தகவல்கள் இணையத்தில் திருடப்படுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. பிற நாடுகளோ, நிறுவனங்களோ தங்களது வல்லாதிக்கத்தை பயன்படுத்தி தனி நபர்களின் தரவுகளை திருடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.