தேசிய செய்திகள்

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் எதிரியின் நீர்மூழ்கிக் கப்பலை நிர்மூலமாக்கிய வைஸ் அட்மிரல் அவாதி மரணம்

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் எதிரியின் நீர்மூழ்கிக் கப்பலை நிர்மூலமாக்கிய கடற்படையின் வைஸ் அட்மிரல் அவாதி காலமானார்.

புதுடெல்லி,

முன்னாள் கப்பற்படை தலைவர் எம்.பி. அவாதி மராட்டிய மாநிலத்தில் அவரது சொந்த ஊரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு தலைவராக இருந்த அட்மிரல் அவாதி, கடற்படையில் 1945-ம் ஆண்டு இணைந்தார். சிக்னல் தொலை தொடர்பில் வல்லுநரரான அவர் இந்திய கடற்படை கப்பல்களான ரஞ்சித், பெத்வா, திர், மைசூர் போன்றவற்றில் பணியாற்றியவர். 1971- வங்காளதேச விடுதலைப் போரில் ஐஎன்எஸ் காமோர்தாவை வழிநடத்திய அவர் எதிரிகள் படையை நேர்த்தியாக எதிர்க்கொண்டு வெற்றியை தனதாக்கினார். அவருடைய வெற்றிகரமான தலைமைக்கு அவருக்கு வீர் சக்கரா விருது வழங்கப்பட்டது. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''வைஸ் அட்மிரல் எம்.பி.அவாதி (ஓய்வு) #PVSM, #VirChakra மறைந்தார். டிசம்பர் 1971-ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் கப்பற்படையை வழிநடத்திய அவர், எதிரிகளின் மூன்று கப்பல்களை கைப்பற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் எதிரியின் நீர்மூழ்கிக் கப்பலை அழிக்கவும் வழிவகுத்தது. இது இந்தியக் கடற்படை வரலாற்றில் ஒரு முத்திரைச் சின்னமாக அமைந்துவிட்டது''என்று தெரிவித்துள்ளார். கடற்படையும் இரங்கல் தெரிவித்துள்ளது. அவாதியின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது என்று கடற்படை தலைவர் சுனில் லன்பா குறிப்பிட்டுள்ளார்.