புதுடெல்லி,
அதிநவீன போர் விமான தயாரிப்புக்காக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைந்தது.
இந்தியாவின் அதிநவீன ரேடாரில் சிக்காத 'ஸ்டெல்த்' போர் விமான தயாரிப்பு திட்டத்துக்காக, இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், போர் விமானங்களுக்கான என்ஜின்களை வடிவமைத்து தயாரிப்பதில் இந்த கூட்டணி கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்கால வான்வெளி பாதுகாப்பு வியூகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய அதிநவீன 5-வது தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரி வடிவம் 2028-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்த அதிநவீன ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்பிற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது. அணு ஆயுதங்களை கொண்ட அண்டை நாடான பாகிஸ்தானுடனான ராணுவ மோதலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து இந்தியா விருப்பக் கோரல்களை வரவேற்றது.
மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், உள்நாட்டு நிறுவனங்களும் இந்த இரட்டை என்ஜின் கொண்ட 'ஸ்டெல்த்' போர் விமான தயாரிப்பில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் கீழ், இந்தியாவில் போர் விமானங்கள் என்ஜின் தயாரிப்புக்கான அதிநவீன வளாகத்தை அமைத்து, என்ஜின்களை கூட்டாக உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளன.
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அம்பானி கூறுகையில், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட உந்துவிசை தொழில்நுட்பத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பம், உற்பத்தி, அளவு மற்றும் செயல்பாட்டுத் திறன்களையும் ஒருங்கிணைத்து, இந்தியாவில் அதிநவீன உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதே இந்த கூட்டணியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், பிரான்சின் சப்ரான் நிறுவனத்திற்குப் போட்டியாக ரோல்ஸ்-ராய்ஸ் களம் இறங்கியுள்ளது. சப்ரான் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் அரசு நிறுவனமான ஜி.டி.ஆர்.இ.-யுடன் இணைந்து, நவீன போர் விமானத்தின் அடுத்தடுத்த பதிப்புகளுக்கு அதிக உந்துசக்தி கொண்ட என்ஜின்களை உருவாக்க முன்மொழிந்துள்ளது.
ஏற்கனவே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 4.5 தலைமுறை தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் வினியோகச் சங்கிலி சிக்கல்களால், என்ஜின் வினியோகத்தில் தாமதத்தை அந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடனான இந்த புதிய கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய பாதுகாப்பு மற்றும் சிவில் ஏரோஸ்பேஸ் துறைகளில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டது குறிப்பிடத்தக்கது.